அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் 23 ஆயிரத்து 695 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்ட‌மன்ற‌ தொகுதிகளிலும் இறந்தவர்கள், கண்டறிய இயலாதவர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவு உள்ளவர்கள்என மொத்தம் 23,695 பேர் கண்டறியபட்டு நீக்கப்பட்டுள்ளனர். அரியலூர் சட்ட‌மன்ற தொகுயில் 4.86 சதவீதம் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 4.06 சதவீதம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இரண்டு தொகுதிகளில் இதுவரை 95 சதவீத எஸ்ஐஆர் படிவங்கள் மீளபெறப்பட்டுள்ளது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்தார். மேலும் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை, அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .
நிகழ்ச்சியில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, உள்ளிட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.