திருச்சி திருவெறும்பூர் கூத்தப்பர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது உசேன் (57). ஆட்டோ ஓட்டுநரான இவர், நேற்று தனது ஆட்டோவை திருச்சி எம்.ஜி.ஆர் சிலை அருகே நிறுத்தியிருந்தார். அப்போது தனது மொபைல் போனை ஆட்டோவிலேயே வைத்துவிட்டு, சிறிது தூரம் தள்ளிச் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர், கண் இமைக்கும் நேரத்தில் ஆட்டோவில் இருந்த செல்போனைத் திருடிக்கொண்டு தப்பியோடினார்.

செல்போன் திருடப்பட்டது குறித்து முகமது உசேன் செசன் கோர்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்தப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு வாலிபரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு சஞ்சீவி நகர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் செல்வம் (30) என்பது தெரியவந்தது. அவர்தான் ஆட்டோவில் இருந்த செல்போனைத் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த செல்போனைப் பறிமுதல் செய்தனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்தத் திருட்டுச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.