ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் சர்லங்கா கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. நேற்று இரவு அங்குள்ள ஒரு குடிசை வீட்டில் எதிர்பாராதவிதமாக மின்கசிவு ஏற்பட்டுள்ளது. அப்போது கிளம்பிய தீ, காற்றின் வேகத்தில் மளமளவென அருகில் இருந்த மற்ற குடிசை வீடுகளுக்கும் பரவியது.

வீடுகள் அடுத்தடுத்து நெருக்கமாக இருந்ததால், தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் மக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடித் தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் 40 வீடுகள் முழுமையாக எரிந்து நாசமாகின. மக்கள் அனைவரும் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறியதால், நல்வாய்ப்பாக யாருக்கும் உயிரிழப்போ அல்லது காயமோ ஏற்படவில்லை எனத் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.